

தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் திருத்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் தமிழ்வழிக் கல்விக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2010 சட்டத்தின் கீழ் முன்னுரிமை நியமன விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்டுள்ள 2026 சட்டமானது, இனி புதிதாக அறிவிக்கப்படும் அரசு வேலைகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் முன்னுரிமை கிடைக்கும்.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம், புதிதாக அறிவிக்கப்படும் அரசுப் பணிகளுக்கு தமிழில் பயின்றவர்களுக்கு 20% ஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா கடந்த ஆண்டு (2025) திமுக ஆட்சியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்த மசோதாவிற்கு இன்று (ஆகஸ்ட் 26) தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை கிடைக்கும்?
* ஒன்றாம் வகுப்பு முதல் அரசுப் பணிக்கான வரையறுக்கப்பட்ட தகுதிப் படிப்பை வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், 20% முன்னுரிமைக்கு தகுதி உடையவர்கள்.
* கல்வி உரிமைச் சட்டத்தின் படி வயதை காரணம் காட்டி, ஒன்றாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக இரண்டாம் வகுப்பு சேர்ந்து எட்டாம் வகுப்பு வரை படித்தவர்களும் 20 சதவீத அரசு வேலை முன்னுரிமைக்கு தகுதி உடையவர்கள்.
* பிற மாநிலங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்று இடைநின்றவர்கள், தமிழ்நாட்டில் அந்த கல்வியை தமிழ் வழியில் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் அரசு வேலைக்கான முன்னுரிமை வழங்கப்படும்.
* 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி, அதில் ஒன்று அல்லது இரண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல், மீண்டும் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்றவர்களும் அரசு வேலை முன்னுரிமைக்குத் தகுதி உடையவர் ஆவர்.
* பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைக்கான முன்னுரிமை வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை கிடைக்காது?
* தமிழ் தவிர்த்து இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி கற்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்களுக்கு அரசு வேலைக்கான முன்னுரிமை வழங்கப்படாது.
* பள்ளிக்கே செல்லாமல், நேரடியாக தனித்தேர்வராக தமிழில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு வேளையில் முன்னுரிமை வழங்கப்படாது.
முன்னுரிமை பெற அரசு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி சான்றிதழ்கள் முதல் அனைத்து சான்றிதழ்களையும், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.