"தன் தாயின் பெயரைத் தனயன் மீட்டளித்த நாள்..." 'தமிழ்நாடு' பிறந்தது எப்படி?

July 18: Tamilnadu Day
Tamilnadu Day
Tamilnadu Day
Published on

மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18ம் தேதி அன்று, வருடம்தோறும் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பெயர் மாற்றத்தின் வரலாறு குறித்துப் பார்ப்போமா?

முதலில், 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற திமுக அரசு, ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து அரசாணை வெளியிட்டது. இதன் பின்னணியில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு உள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா மொழிவாரியாக மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, இன்றைய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் மாகாணம் என்று இருந்தது. 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் சில பகுதிகள் பிரிந்து சென்று தனி மாநிலங்களாக உருவாயின. எஞ்சிய பகுதிகள் "மெட்ராஸ் மாநிலம்" என்ற பெயரிலேயே நீடித்தன.

இந்த "மெட்ராஸ் மாநிலம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே வலுவாக ஒலித்து வந்தது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து, சங்கரலிங்கனார் என்ற சமூக ஆர்வலர் 1956 இல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அவருடைய தியாகம் தமிழகத்தில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது. அன்றைய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்கள், 1967 ஜூலை 18 ஆம் தேதி சென்னை மாநிலத்தின் பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், 1968 நவம்பர் 23 அன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14 பொங்கல் அன்று "மெட்ராஸ் மாநிலம்" என்பது அதிகாரப்பூர்வமாக "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆகவே, தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜூலை 18 ஆம் தேதியை நினைவுகூரும் வகையிலும், அந்தப் பெயர் மாற்றத்திற்காகப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையிலும் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் இமயமலை நதிப்பறவைகள்: நமக்கு என்ன ஆபத்து?
Tamilnadu Day

"தன் தாயின் பெயரைத் தனயன் மீட்டளித்த நாள்" என்று அண்ணாதுரை அவர்கள், மெட்ராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டார்.

பெயரிலேயே "நாடு" என்ற அடையாளத்தைத் தாங்கி நிற்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இது தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் உள்ள தனிப்பட்ட பெருமையைக் காட்டுகிறது. தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் இந்த நாள், தமிழ் மொழியின் செழுமையையும், பண்பாட்டின் பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com