தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையமாக இருக்கும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு புறநகர் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதோடு 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் வரவேண்டிய புறநகர் ரயில்கள் அடுத்த 45 நாட்களுக்கு 5 மற்றும் 6வது நடைமேடையில் வந்து செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதனால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் சூழலில், தற்போது எழும்பூரில் இருந்து செல்லும் 8 விரைவு ரயில்கள் இனி மாம்பலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, நேற்று முதல் தற்காலிக அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க எழும்பூரில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் நாளான நேற்று, பல மின்சார ரயில்கள், காலதாமதமாக இயக்கப்பட்டன. அதோடு சிக்னல் பிரச்சினை காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் நின்று செல்வதாக பயணிகள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் முடிவடையும் வரை, எழும்பூரில் இருந்து புறப்படும் 8 விரைவு ரயில்கள் இனி மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏப்ரல் 5ஆம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை (பிப்ரவரி 22) முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை தினந்தோறும் 8 ரயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும்.
கடந்த இரு நாட்களாக புறநகர் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் விரைவு ரயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும் என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு பயணிகளுக்கு சற்று ஆறுதலை அளிக்கும்.