தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது.
கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவை நோக்கிய தங்கத்தின் விலை, அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது. நேற்று காலை 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,840 உயர்ந்து, ரூ.1,12,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.230 உயர்ந்து ரூ.14,050-க்கு விற்பனையானது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாலையும் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.12,800-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,100-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று காலை மற்றும் மாலை என இரண்டு முறை தலா ரூ.5 உயர்ந்தது. இதன்படி 1 கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை ரூ.2,240 வரை உயர்ந்தது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்றும் (மே 7) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,150-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.2,240 உயர்ந்த சூழலில், இன்றும் ரூ.400 உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.