
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் தங்க ஆபரணங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டத் தான் செய்கிறார்கள். இல்லத்தரசிகள் மத்தியில் தங்கத்தின் விலை உயர்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒருவர் எவ்வளவு தங்கத்தை இருப்பு வைத்திருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிறந்தநாள், திருமணம் மற்றும் பல சுப நிகழ்ச்சிகளுக்கு தங்க ஆபரணங்களை பரிசளிப்பதை இந்திய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்றும் இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய காலகட்டத்தில் தங்கத்தை பலரும் முதலீடு செய்வதற்கும், தங்கமே ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. பலர் தங்களது குழந்தைகளின் திருமணத்திற்காகவும், எதிர்காலத் திட்டங்களுக்காகவும் முன்கூட்டியே தங்கத்தை வாங்குகிறார்கள். மக்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்கு தங்கத்தை முன்கூட்டியே வாங்கி வீட்டில் வைக்கிறார்கள்.
சர்வதேச அளவில் தங்கம் மிகப்பெரிய முதலீட்டுப் பொருளாக மாறியுள்ளது. இது தவிர ஒவ்வொரு நாட்டு ரிசர்வ் வங்கியும் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவிக்கின்றன. இதனால் தான் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொருவரது வீட்டிலும் எவ்வளவு தங்கத்தை இருப்பு வைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரித்துறை சட்டத்தின் படி, ஒருவரது வீட்டில் எவ்வளவு தங்கம் இருக்க வேண்டும் என்பதற்கான உச்சபட்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் மூலம் ஒருவர் வைத்திருக்கும் தங்கத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால், அவர் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்கிறது வருமான வரித்துறை. வாங்கிய தங்கத்திற்கு ரசீது, பரிசாக பெற்றதற்கு பரிசளிப்பு கடிதம் அல்லது பரம்பரை வழியாக வந்ததற்கு சான்றுகள் போன்ற சரியான ஆவணங்கள் இருந்தால் எந்த அளவிலான தங்கத்தையும் வீட்டில் வைத்திருக்கலாம்.
ஆனால், பலர் தங்கள் தங்கத்தின் மூல ஆதாரத்துக்கான ஆவணங்களை வைத்திருக்காமல் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறலாம் என்பதற்கான ‘பாதுகாப்பு அளவு’ நெறிமுறைகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி திருமணமான பெண்கள் 500 கிராம் (62.5 சவரன்) தங்க ஆபரணங்களை ஆவணமின்றி வைத்துக் கொள்ளலாம். அதேபோல் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் (31.25 சவரன்) தங்கத்தை ஆவணமின்றி வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆண்களைப் பொறுத்தவரை, திருமணமான அல்லது திருமணமாகாத ஆண்கள் அனைவருமே 100 கிராம் (12.5 சவரன்) தங்கத்தை வைத்துக் கொள்ளலாம்.
இந்த தங்கத்தின் அளவு வழக்கமான குடும்ப நகைகள் எனக்கு கருதப்பட்டு, வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்படாது. இந்த அளவைக் காட்டிலும் அதிக தங்கம் வைத்திருந்தால், அதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்ய முடியாது. ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் மட்டுமே தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க கட்டிகள், நகைகள் மற்றும் நாணயங்கள் என அனைத்தையும் சேர்த்து தான் பாதுகாப்பு அளவு தங்கத்திற்கான நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. சுப நிகழ்ச்சிகளில் பரிசாக கிடைத்த தங்க ஆபரணங்களுக்கும் ஆதாரம் ஏதேனும் வைத்திருந்தால் நல்லது.
எனவே, இத்தகைய சூழலில் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய நினைப்பவர்கள், காகித தங்கத்தில் அதாவது தங்க முதலீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்து வைக்கலாம். அது பாதுகாப்பானது என்பதைவிட, மிகவும் லாபகரமானதாகவும் இருக்கும்