

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ரூ.1 லட்சத்தைக் கடந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவை நோக்கிய தங்கத்தின் விலை, அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது.
மே 6-ம் தேதி 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,240 உயர்ந்தது. வெள்ளியின் விலையும் ரூ.10 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.14,150-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,200-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும் நேற்று காலை மாற்றமின்றி ரூ.275-க்கு விற்பனையானது. இருப்பினும் அடுத்த 1 மணி நேரத்திலேயே கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.280-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் சரிவு, பங்குச்சந்தை சரிவு மற்றும் உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்கத்தின் விலையை அதிகம் பாதிக்கிறது.
தங்கத்தின் தொடர் விலையேற்றத்தால், சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. ஆனால் அமெரிக்க டாலர் சரிவால் தங்கத்தில் மாற்று முதலீடு செய்தவர்களுக்கு, இந்த விலை உயர்வு லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (மே 9) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,640 உயர்ந்தது. நேற்று மாற்றமில்லாமல் விற்பனையான தங்கத்தின் விலை, இன்றும் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனையாவது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.