

தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மும்முரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வரும் விஜய், அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.
அவ்வகையில் தற்போது வேட்பாளர்களுக்கு உதவும் விதமாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தன்னார்வலர்களாக நியமிக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் தலைவர் விஜய்.
தமிழக அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ள விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கூட்டணிக்கு எந்தக் கட்சியும் வராத சூழலில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை களத்தில் இருக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் 6 தேர்தல் குழுக்களை அமைக்க தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஒவ்வொரு குழுவிலும் 10 பேர் இடம் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தவெக மாவட்ட செயலாளர்கள், 234 தொகுதிகளில் ஆறு குழுக்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தலைமை தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் நபர்கள் அந்தந்த தொகுதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், ஒரு குழுவில் இடம் பெற்றவர் மற்றொரு குழுவில் இடம் பெறக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர்களுக்கு உதவ ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை தன்னார்வலர்களாக நியமிக்க நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார் விஜய்.
இதுகுறித்து விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் சந்திக்க உள்ளது. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை, நிர்வாகிகள் தன்னார்வலராக நியமிக்க வேண்டும்.
ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான வேலைகளில் மாவட்ட நிர்வாகிகள் உடனே ஈடுபட வேண்டும்” என விஜய் தெரிவித்துள்ளார்
தவெக சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் வாங்கினர். ஆனால், இதில் எதிர்பார்த்த அளவிற்கான விருப்பம் அணுக்கள் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெகு விரைவில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்நிலையில் போடி தொகுதியில் வாக்காளர்களுக்கு லட்டு கொடுத்து தவெக-விற்காக மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக செங்கோட்டையன் போடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை தன்னார்வலர்களாக நியமிக்க வேண்டும் என விஜய் போட்டிருக்கும் உத்தரவு, தவெக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.