

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் நேற்று வனஜா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் அனுமதி இன்றி ஆலை இயங்கியதே விபத்திற்கு முதல் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 13ஆம் தேதி சாத்தூர் பகுதியில் எக்ஸெல் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டு இருப்பது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீட்புப் பணியின் போது, நேற்று இரவு 7:20 மணிக்கு மீண்டும் விபத்து ஏற்பட்டதில், தீயணைப்பு வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் வெடி விபத்திற்கான முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
இதன்படி விதிகளை மீறி ஒரே நேரத்தில் அதிக வெடிகளைத் தயாரிக்க முயன்றதே வெடி விபத்திற்கு முக்கிய காரணம். பணியாட்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக கொடுக்கப்படாமல், அதிக வெடிகளை தயாரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக இருந்ததும் வெடி விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு. தாரேஸ் அகமது விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டாசு ஆலைகளில் ஆண்டுதோறும் வெடி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனைத் தடுக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடி விபத்துகளில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.