எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் தீவிபத்து: பலர் பலி!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-இதுகுறித்து செகந்திராபாத் போலீஸார் கூறியதாவது;
செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகேயுள்ள ரூபி எலக்ட்ரிக் ஷோ ரூமில் நேற்றிரவு திடீரென தீ பிடித்து, மளமளவென பக்கத்து கட்டிடங்களுக்கும் பரவியது.
முதற்கட்ட விசாரணையில் எலக்ட்ரிக் ஷோ ரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் திடீரென தீ பிடித்ததுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இத்தீ விபத்தில் மொத்தம் 24 பேர் சிக்கி இருந்தனர்.
-இவ்வாறு தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெலுங்கானா அமைச்சர் முகமது அலி கூறியதாவது;
இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்க கடுமையாகப் போராடியும் கடும் புகையால் சிலர் உயிரிழந்துவிட்டனர். லாட்ஜில் இருந்த பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-இவ்வாறு தெரிவித்தார்.
இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.