தலையே போனாலும் தலைவணங்க மாட்டேன்: டெல்லி துணை முதல்வர்! 

தலையே போனாலும் தலைவணங்க மாட்டேன்: டெல்லி துணை முதல்வர்! 
Updated on

டெல்லியின் ஆளுங்கட்சியான ஆம் அத்மியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா மீது ஊழல் முறைகேடு காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் அவர் பாஜக-வில் இணைந்தால் அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என தனக்கு தெரிவிக்கப் பட்டதாக மணிஷ் சிசோடியா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் கலால் வரி விதிப்பு முறை மாற்றப் பட்டதில்  டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா முறைகேடுகள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது இல்லம் உட்பட 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் மணீஷ் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

-இந்நிலையில் இன்று குஜராத்தில் மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசியதாவது; 

நான் ஆம் அத்மியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்தால், என் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என பாஜகவிலிருந்து தகவல் வந்தது. நான் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவன். என் தலையே போனாலும் அநீதிக்கும் சதிக்கும் தலைவணங்க மாட்டேன். 

-இவ்வாறு மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். 

இந்நிலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், தன் கட்சியை உடைக்க பிஜேபி சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; 

விரைவில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம். அதேபோல என்மீதும் பொய்க் குற்றச்சட்டுகள் கூறி என்னையும் கைது செய்ய முற்படலாம். இவை அனைத்தும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காக பிஜேபி செய்கிறது.  

-இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  

இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மணிஷ் சிசோடியாவை பதவி விலக்க வலியுறுத்தி, இன்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

logo
Kalki Online
kalkionline.com