
தமிழகத்தில் பெண்கள் தொழில், அரசியல், தனியார் மற்றும் அரசு வேலைகளிலும் பல்வேறு பொறுப்புகளில் ஆண்களுக்கு நிகராக சாதனைகளை புரிந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்துமீறல்கள், பிரச்சனைகள் மற்றும் தடைகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்றி சாதித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வேலைக்கு போகும் பெண்கள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு வேலையில் இருக்கும் பிரச்சனைகளையும் சமாளித்து வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு பெற, ஒரு பெண் கடந்த 12 மாதங்களுக்குள் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 80 நாட்களுக்குப் பணிபுரிந்திருக்க வேண்டியது கட்டாயம். அப்படி இருந்தால் மட்டுமே மகப்பேறு விடுப்பு கிடைக்கும்.
இந்நிலையில் கர்நாடக அரசு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாதவிடாய் விடுப்பு என்பது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதவிடாய் விடுமுறை கொள்கையானது அரசு மற்றும் ஐடி உள்பட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பொருந்தும். மேலும் இந்தக் கொள்கை ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்ப, ஒரு மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஒரே நேரத்தில் என மொத்தம் 12 நாள்கள் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்றும் இது பெண்களின் நலனை சிந்திக்கும் ஒரு முற்போக்கான அரசின் பெருமைக்குரிய விஷயம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில், மாதந்தோறும் இரண்டு நாள்களும், பீகார் மற்றும் ஒடிசாவில் ஆண்டுக்கு 12 நாள்களும் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால்,இந்த விதிமுறை அம்மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதன் மூலம், பீகார், ஒடிசா, கேரளா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களின் மாதவிடாய் விடுப்பை அமல்படுத்திய பட்டியலில் தற்போது கர்நாடகாவும் இணைந்துள்ளது. அண்டை மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு மாதவிடாய் விடுப்பு அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே எழுந்துள்ளது.