
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளது துவாரகா UP பள்ளி. இந்த பள்ளியில் கன்னியாஸ்திரி சபீனா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 55 வயது. சமீபத்தில் மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தடை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரி சபீனா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளார். அவர் இந்த போட்டியில் மற்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி மின்னல் வேகத்தில் அனைவரையும் முந்தி சென்று முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தனது மத உடையிலும்(கன்னியாஸ்திரி ஆடை), வெறுங்காலுடனும் இந்த போட்டியில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவர், தடகளப் போட்டியில் தடைகளைத் தாண்டி வேகமாக முன்னேறிச் சென்று சிரமமின்றி குதித்தபோது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், அவர் இந்த போட்டியில் முதலிடத்தை பிடித்ததும், பார்வையாளர்களின் கைதட்டலும், ஆரவாரமும் நிற்க வெகுநேரம் ஆனது.
அரங்கத்தில் இருந்தவர்கள் ‘சகோதரி, வாழ்த்துக்கள்!’ என்று கூச்சலிட்டனர்.
55 வயதில், வெறும் காலுடன் ஓடி தங்கப்பதக்கத்தை வென்றதுடன் சாதனைக்கு வயதுக்கு தடையில்லை என்பதையும் நிரூபித்துள்ளார்.
காசர்கோடு என்னப்பாராவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சபீனா 1993-ம் ஆண்டு வயநாட்டுக்கு குடிபெயர்ந்தார். அவர் 9-ம் வகுப்பு படிக்கும் போது தேசிய அளவிலான தடை தாண்டும் பந்தயங்களில் பங்கேற்று தடகளத்தில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். அத்துடன் அவரது வெற்றி நிற்காமல் கல்லூரிப் பருவத்தில், பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்தார். பின்னர் படிப்பில் மீது கவனம் செலுத்த ஆரம்பித்த அவர், குறைவான போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள கன்னியாஸ்திரி சபீனா, அதன்முன் இறுதியாக ஒருமுறை தடகள போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியதாகவும், அதற்காகவே மாநில மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கன்னியாஸ்திரி சபீனா தற்போது துவாரகா மாகாண இல்லத்தின் வழிபாட்டு மையத்தில் உறுப்பினராக உள்ளார். தடகளத்தின் மீதான தனது ஆர்வம் மற்றும் தனது சமூகப் பணி இரண்டையும் சமநிலைப்படுத்துகிறார்.
அவர் தடகள போட்டியில் கலந்து கொண்டு ஓடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கேரளா முழுவதும் உள்ள மக்களிடமிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.