

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதி முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் மு.க.ஸ்டாலின். இந்த வழக்கின் தீர்ப்பை சற்று முன் வெளியிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். விவிபேட்களை சரிபார்க்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு குறித்த வழக்கை விசாரித்து வந்தது.
சட்டமன்ற தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடுகளை முழுமையாக மறுசரிபார்ப்பு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டது.
திமுக தாக்கல் செய்த இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பிலும், தேர்தல் ஆணையம் மற்றும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்த நிலையில், செபடம்பர் 3-ம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.