

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னுரிமை (Priority) மற்றும் முன்னுரிமையற்ற (Non-Priority) குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடைக்கோடி மக்களுக்கும் உதவுவதற்காக ரேஷன் கார்டுகள் மூலம் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், நியாய விலைக் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வாங்கலாம், இது மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் இது ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு புதிய கொள்கைகளும் விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் (One Nation One Ration Card - ONORC) கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள், தாங்கள் வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், இந்தியாவில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடையிலும் (Ration Shop) தங்களுக்குரிய மானிய உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது ஆதார் இணைப்பு மற்றும் பயோமெட்ரிக் முறை (ePoS) மூலம் செயல்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கான ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர மத்திய அரசு ஒரு புதிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. அதாவது அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்களை ஏற்பாடு செய்துள்ளது மத்திய அரசு. இந்த ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். குஜராத்தின் காந்தி நகரில் இந்த திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் ரேஷன் கடைகளில் பணம் செலுத்தி, டிஜிட்டல் ரூபாய் முறை மூலம் பொருட்களைப் பெறலாம். இதற்காக, பயனாளிகளுக்கு டிஜிட்டல் வாலெட்கள் வழங்கப்படும். இந்த வாலெட்களில் ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய்கள் டெபாசிட் செய்யப்படும். ரேஷனில் நீங்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் அளவைப் பொறுத்து இந்த ரூபாய்களை நீங்கள் செலவழித்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் QR குறியீடு மற்றும் ஆதார் OTP அமைப்பு மூலம் செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை எடை போடுவதில் நடக்கும் மோசடியை தடுக்க முடியும் என்பதுடன் யார் எவ்வளவு ரேஷன் பொருட்களை வாங்கியுள்ளனர் என்ற விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. பயனாளிகள் ஏடிஎம் இயந்திரங்களைப் போலவே இருக்கும் அன்னபூர்த்தி என்று அழைக்கப்படும் இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களைப் பெறலாம்.
35 வினாடிகளில் 25 கிலோ தானியங்களை இவற்றின் மூலம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஏடிஎம்களைப் பயன்படுத்த டிஜிட்டல் கார்டு கொடுக்கப்படும். அந்த கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து, கருவிழி மற்றும் கைரேகைப் பதிவுகளை வழங்கிய பின்னர் அரிசி போன்ற உங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை இந்த இயந்திரத்தில் இருந்து எடுக்கலாம்.
தற்போது, இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கு முன், சோதனை அடிப்படையில் ஆய்வு செய்யும் பொருட்டு, மார்ச் மாதம் முதல் சில மாநிலங்களில் மட்டும் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த சோதனை முறை வெற்றியடையும் பட்சத்தில் நாடு முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், தானியங்கி இயந்திரங்களையும் (Grain ATMs) இணைப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, சாதாரண மக்களின் அலைச்சலும் குறையும்.
இந்த திட்டம் தமிழகத்திற்கு வரும் பட்சத்தில் பயனாளிகள் கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.