

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர். இயக்குநர் இமயம் பாரதிராஜா (வயது 84) இன்று காலை உயிரிழந்தார். இவருடைய இழப்பு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு காலையிலிருந்தே சினிமா பிரபலங்கள் பலரும், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், காலையிலேயே பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதல்வர் தற்போது அறிவித்துள்ளார். தற்போது முதல்வர் விஜய் நிதி ஆயோக் பங்கேற்க டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
கிராமத்து மண்வாசனை கலந்த திரைக்கதையை தமிழ் சினிமாவில் அதிகம் இயக்கியவர் பாரதிராஜா. பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். 1977-ல் பாரதிராஜா இயக்கிய முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
விகடன் குழுவினர் தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு மட்டுமே அதிகபட்சமாக 62.5 மதிப்பெண்களை அளித்துள்ளது. அந்தப் படம் தான் 16 வயதினிலே. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு எண்ணற்ற படங்கள் வெளிவந்தாலும் இன்று வரை 16 வயதினிலே படத்திற்கு கிடைத்த அளவிற்கு, வேறு எந்தப் படத்திற்கும் மதிப்பெண் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜா பெற்ற விருதுகள்:
தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற பல படைப்புகளை கொடுத்திருக்கும் பாரதிராஜாவுக்கு தமிழக அரசும், மத்திய அரசும் பல்வேறு விருதுகளை கொடுத்து கௌரவித்துள்ளது.
அறிஞர் அண்ணா விருது - 2001
பத்மஸ்ரீ விருது - 2004
கௌரவ டாக்டர் பட்டம் - 2005
முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா, அந்திமந்தாமரை மற்றும் கடல் பூக்கள் உள்ளிட்ட ஐந்து படங்களுக்கும் தேசிய விருதை வென்றிருந்தார் பாரதிராஜா. இது தவிர சீதாகொகா சிலுகா என்ற தெலுங்கு திரைப்படத்திற்கும் தேசிய விருதை வென்றிருந்தார்.
16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை மற்றும் ஈர நிலம் ஆகிய 3 படங்களுக்கு தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை பாரதிராஜா வென்றார்.
இது தவிர 3 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 2 விஜய் விருதுகள் மற்றும் 1 நந்தி விருது என பல விருதுகளை பாரதிராஜா பெற்றுள்ளார்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா ஆற்றிய பங்கை கௌரவிக்கும் விதமாக பல்வேறு விருதுகள் இவரை அலங்கரித்துள்ளன.
இன்று தமிழ் சினிமா வரைக்கும் மிகப்பெரிய ஈடுயிணையில்லா இழப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத் தொண்ட ஒரு கலைஞரை தமிழ் சினிமா இன்று இழந்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
தமிழ் சினிமாவிற்கு பாரதிராஜா ஆற்றிய பங்கை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருப்பது தமிழ் திரை உலகினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.