

நாட்டில் பெரும்பாலான பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தையே அதிகம் நம்பியுள்ளனர். பாதுகாப்பு வசதிகள், குறைவான டிக்கெட் கட்டணம் மற்றும் எளிதான சேவையே ரயில் போக்குவரத்தை பயணிகள் விரும்ப முக்கிய காரணம்.
பயணிகளுக்கான சேவையை எளிதாக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை இந்தியன் ரயில்வே செய்து வருகிறது. அவ்வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சொயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வர இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி வருகின்ற ஆகஸ்ட் 2026 முதல், ஏஐ உதவியுடன் ரயில் டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தொழில்நுட்ப உலகில் கடந்த சில மாதங்களாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஏஐ பயன்பாடு மெல்ல மெல்ல உள்நுழைந்துள்ள நிலையில், தற்போது ரயில்வே துறையிலும் நுழைந்து விட்டது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலையிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால், அனைத்து துறைகளிலும் திறம்பட செயல்பட முடியும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை டிஜிட்டல் பயன்பாடு என்பது குறைவாகவே இருந்தது. ஆனால் இன்றோ டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் வருங்காலத்தில் பெரும்பாலானோர் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போதே ஏஐ தொழில்நுட்பத்தை இந்தியன் ரயில்வே பயன்படுத்தி இருப்பது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு வரை ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமெனில் அதற்கு ஒரு சில நிமிடங்கள் ஆகும். சில நெருக்கடியான சூழ்நிலைகள் மற்றும் பண்டிகை காலங்களில் அதிகம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்ய முற்படும் போது, சர்வர் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படும்.
இந்நிலையில் எளிய மற்றும் விரைவான அணுகல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, டிக்கெட் முன்பதிவில் ஏஐ தொழில்நுட்பத்தை இந்தியன் ரயில்வே பயன்படுத்தி உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலில், இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் ரயில்வே டிக்கெட் முன்பதிவை ஏஐ மூலம் செய்து கொள்ளலாம்.
ஏஐ டிக்கெட் முன்பதிவின் பயன்கள்:
1. ரயில்களின் தற்போதைய இருப்பிடம், இருக்கைகள் எண்ணிக்கை மற்றும் பிளாட்பார்ம் எண் உள்ளிட்ட தகவல்களை துல்லியமாகவும், வேகமாகவும் தெரிந்து கொள்ள முடியும்.
2. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தல், டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணத்தைத் திரும்ப பெறுதல் உள்ளிட்ட சேவைகள் மேலும் எளிமையாக்கப்படும்.
3. ஏஐ தொழில்நுட்பத்தின் காரணமாக மிகக் குறைந்த நேரத்திலேயே அதிகளவு முன்பதிவுகளை கையாள முடியும் என்பதால், சர்வர் கோளாறு பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.
ரயில்வே துறையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு:
1. IRCTC தளத்தில் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுடபம், சந்தேகத்திற்குரிய பயன்ர்களின் கணக்குகளைக் கண்டறிந்து நீக்குகிறது. அதோடு ரயில்வே சமையலறையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கிறது.
2. Rail One செயலியில் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம், காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கான டிக்கெட் உறுதியாவதை 94% துல்லியமாக கணிக்கிறது.
3. தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது முறைகேடுகளைத் தடுக்க ஏஐ பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சரியான பயணிக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்கிறது.