

மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் S.R.G.ராஜண்ணா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று உயிரிழந்தார். செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரான இவர், இசையுலகில் அசாத்தியமான பல சாதனைகளைப் புரிந்துள்ளார். சுமார் 70 வருடங்களுக்கும் மேலாக இசையுலகில் தனக்கென தனிப் புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா.
செம்பனார்கோயிலைச் சேர்ந்த கோவிந்தசாமி பிள்ளையின் இளைய மகனான ராஜண்ணா, தனது மூத்த சகோதரரான எஸ்.ஆர்.ஜி.சம்பந்தம் அவர்களுடன் இணைந்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறம்பட செயலாற்றியுள்ளார். நாதஸ்வர இசை மரபில் பல தலைமுறைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜண்ணா.
ரக்தி மேளம் உள்பட செம்பனார்கோயில் பாணியைச் சேர்ந்த பிரதான கலைஞர்களாக விளங்கிய இந்த சகோதரர்கள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
காஞ்சி சங்கர மடம், திருவாவடுதுறை, தருமபுரம், மயிலாடுதுறை மயூரநாத சுவாமி திருக்கோயில் மற்றும் திருப்பனந்தாள் ஆதீனம் என பல முக்கிய ஆன்மீக தலங்களில் ஆஸ்தான வித்வானாகப் பணியாற்றியுள்ளார் ராஜண்ணா. மேலும் சென்னையில் உள்ள புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றி இறையன்புக்கும் இசையை ஊட்டினார் ராஜண்ணா. இதுதவிர மேலும் பல சமஸ்தானங்களின் அழைப்பின் பேரில், தனது அண்ணனுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை வழங்கினார்.
தனது இசையால் உலகை இசைமழையில் நனைய வைத்த பெருமையைப் பெற்றவர். இசையுலகில் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்களுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி பாடிய போது தான், சிறிய நகரமான செம்பனார்கோயில், தேவாரத்திலும் சிறப்பிடம் பெற்றது. இவர்களின் தாத்தாவான ராமசாமி பிள்ளை, நாதஸ்வரம் வாசிப்பவர்களில் முதன்முறையாக இசைத் தட்டில் (Disc) பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பதிவு இன்றளவும் கிடைப்பது, அவரது வெற்றியை பறைசாற்றுகிறது.
பந்தநல்லூர் வேணுகோபால பிள்ளை மற்றும் கோவிந்தசாமி பிள்ளை ஆகிய இருவரிடமிருந்து ராஜண்ணா நாதஸ்வரம் பயிற்சியைப் பெற்றார். மயிலாடுதுறையில் வசித்த வந்த இவர், பிற்காலத்தில் சென்னையைத் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டார்.
கலைத்துறையின் உயரிய விருதான கலைமாமணி உள்பட பல உயரிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்ரீ ஷண்முகானந்தா சபையின் “தேசிய மேன்மை விருது” (National Eminence Award) நாதஸ்வரத்திற்காக ராஜண்ணாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது புகழ்பெற்ற நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் 125-வது பிறந்த ஆண்டு நினைவாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சென்னை மியூசிக் அகாடமியின் டி.டி.கே. சிறப்புத் தகுதி விருதையும் (T.T.K. Award for Excellence) ராஜண்ணா பெற்றுள்ளார். 94 வயதான S.R.G.ராஜண்ணாவின் இழப்பு, இசையுலகிற்கு பேரிழப்பாக கருதப்படும்