உங்க வீட்டுக்குள் திடீரென ஒரு குரங்கு நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பயப்படுவீர்கள் அல்லது தடியை கையில் எடுத்து விரட்டுவீர்கள் அல்லவா? ஆனால் உத்தரபிரதேசத்தில் வீட்டினுள் நுழைந்த குரங்கை Alexa பயன்படுத்தி ஒரு சிறுமி விரட்டி அடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்ற நிகிதா என்ற 13 வயது சிறுமி, அங்கு குடும்பத்தினருடன் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது தன் சகோதரி குழந்தையுடன் தனியாக ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென சமையலறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. அச்சமயத்தில் குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.
சமையலறையில் நுழைந்த குரங்கு வீட்டு பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசி இருக்கிறது. பின்னர் குழந்தையை நோக்கி குரங்கு வந்ததால், என்ன செய்வது என்று புரியாமல் நிகிதா அமைதியாக இருந்திருக்கிறார். குழந்தை குரங்கைப் பார்த்து அலறி அழுதிருக்கிறது.
அச்சமயத்தில் வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா சாதனம் நாய் குறைப்பது போன்ற ஒளியை எழுப்பியதால், குரங்கு அலறித்துடித்து அங்கிருந்து ஓடி இருக்கிறது.
இந்த நிகழ்வில் நிகிதா தனது சமயோஜித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் நாம் நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாக உள்ளது.
இருப்பினும் இதுபோன்ற சாதனங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தாகவும் உள்ளன. கடந்த டிசம்பர் 2021 இல் பத்து வயது சிறுமிக்கு, பிளக்கில் மாட்டியிருக்கும் போன் சார்ஜரின் கம்பியில் காசை வைக்கும்படி அலெக்சா சவால் கொடுத்ததில், அக்குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அமேசான் “இந்தப் பிழையை நாங்கள் விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.