

மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு தனக்கான கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை என சமீபத்தில் மாணவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் பாரதிதாசன் முறையாக பில்கள் வழங்காத நிலையிலும் ரூ.23.95 லட்சம் விடுவிப்பு என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் பாரதிதாசன், தமிழக அரசின் 'அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை' திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் பல்கலைக்கழகக் கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்படும் சூழல் நிலவுவதாகவும், கடும் நிதி நெருக்கடி மனரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்து, பாரதிதாசன் சமூக வலைத்தளங்களில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையேயும் கல்வி ஆர்வலர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றது.
சமூக நீதித் துறை அமைச்சரின் உறுதிமொழி:
இப்பிரச்சினை விவகாரமாக செய்தியாளர்களை சந்தித்த சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு, "மாணவர் பாரதிதாசனின் கல்விப் பயணம் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இன்னும் இரு தினங்களுக்குள் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என வாக்குறுதி அளித்திருந்தார்.
ஒரே நாளில் நிதி விடுவிப்பு:
அமைச்சரின் உறுதிமொழியைத் தொடர்ந்து, மாணவர் பாரதிதாசனுக்கு வழங்கப்பட வேண்டிய எஞ்சிய ரூ.23.95 லட்சம் நிதி நேற்று ஒரே நாளில் முழுமையாக விடுவிக்கப்பட்டது. முன்னதாக இத்திட்டத்தின் கீழ் ரூ.12.21 லட்சம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்தத் தொகையும் முழுமையாகக் கிடைத்துள்ளது.
நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகக் கட்டணப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் மாணவர் பாரதிதாசன் தனது ஆராய்ச்சிப் படிப்பை எவ்விதத் தடையுமின்றி அமைதியான முறையில் தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், அவரது ஆராய்ச்சிப் படிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கான தடைகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.