

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தற்போது 7 தானியங்கி ஓட்டுநர் சோதனைப் பாதைகளை அமைக்க உள்ளது. விரைவில் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய சாலைகளில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்ட விரும்பும் தனி நபர் ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் முக்கியமாகும். ஓட்டுநர் உரிமம் என்பது போக்குவரத்து துறையால் வழங்கப்படும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். இந்த ஆவணம் இருந்தால் தான் ஒரு நபர் வாகனத்தை சாலைகளில் ஓட்ட முடியும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சாலையில் வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டாலோ அல்லது டிராபிக் போலீசிடம் மாட்டிக்கொண்டாலே அபராதம் விதிக்கப்படும்.
அந்த வகையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், 18 வயது நிரம்பியவர்கள் RTO அலுவலகம் அல்லது பரிவஹன் (Parivahan) இணையதளம் மூலம் ஓட்டுநர் உரிமம் (DL) பெறலாம்.
முன்பெல்லாம் ஓட்டுநர் உரிமம் பெற அந்தந்த நகரங்களில் உள்ள RTO அலுவலகங்களில் நாம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பிறகு ஒரு மாதம் கழித்து உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு நடத்தப்படும். ஆனால் தற்போது இந்த புதிய டெக்னாலஜி வசதிகளுடன் நாம் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கமுடியும்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் டிரைவிங் லைசென்ஸ் தேர்வுக்கு கணிணிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத்தளங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஓட்டுநர் தேர்வுகளை நடத்தும் பொருட்டும், மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம், தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து தற்போது 7 புதிய கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத் தளங்களை (ADTT) அமைத்துள்ளது. விரைவில் இதனை 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் (மையம்), திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை (வடக்கு), சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் திருச்சி (மேற்கு) ஆகிய 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உருவாக்கப்பட்டுள்ள கணிணிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத்தளங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஓட்டுநர் சோதனை தடங்களை தானியக்கமாக்குவதற்காக மாருதி சுசுகிக்கும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
நியாயமான மற்றும் திறமையான ஓட்டுநர் உரிமச் செயல்முறைக்காக இந்த ADTTகள் உயர்-வரையறை கேமராக்கள் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகின்றன. இது எந்தவொரு மனித தலையீடும் இல்லாமல் மற்றும் திறமையான ஓட்டுநர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது என்று இந்தியாவின் மாருதி சுசுகி மூத்த நிர்வாக அதிகாரி ராகுல் பாரதி தெரிவித்தார்.
மேலும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்ட தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் இந்தியாவில் 1.77 லட்சம் சாலை விபத்து இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒழுக்கான, திறமையான ஓட்டுநர் நடைமுறைகளை ஊக்குவிப்பதும், கடுமையான ஓட்டுநர் மதிப்பீட்டை உறுதி செய்வதும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் மிக முக்கியம் என்று அவர் கூறினார்.
கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் (ADTT) உயர்-வரையறை கேமராக்கள், RFID சென்சார்கள், நிகழ்நேர பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த, தரப்படுத்தப்பட்ட மற்றும் புறநிலை ஓட்டுநர் உரிம சோதனை செயல்முறையை செயல்படுத்த ஒருங்கிணைந்த IT அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
தற்போது கோயம்புத்தூர் (மத்திய), திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மதுரை (வடக்கு), சிவகங்கை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி (மேற்கு) ஆகிய மாவட்டங்களில் ADTT நடைமுறைக்கு வந்ததுள்ள நிலையில் விரைவில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் உள்ள ADTT-கள் இரு சக்கர வாகனம் மற்றும் இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களுக்கு சேவை செய்யும்.
ADTT-ம் மூலம் இனி மனித தலையீடுகள் இன்றி டிரைவிங் லைசென்ஸ் தேர்ச்சி பெற முடியும் என்பதுடன், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதிலும் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.