

சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் மக்கள் சிலிண்டர்களை அவசர அவசரமாக முன்பதிவு செய்வதுமாக இருந்தனர். எரிவாயு சிலிண்டர்களை பதுக்குவது மற்றும் கருப்பு சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் எடை 10 கிலோவாக குறைக்கப்படும் என்ற செய்தி தீயாக பரவி வந்தது. இந்நிலையில் இது முற்றிலும் வதந்தி என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், அதை சமாளிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் எடையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின. ஏற்கனவே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் எடையும் குறைக்கப் போவதாக வதந்திகள் பரவியதும் மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
வீட்டு உபயோக சிலிண்டர் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்கப்படுவதாக பரவும் தகவலில் உண்மையில்லை. இறக்குமதி பாதிப்பால் தட்டுப்பாடு நிலவினாலும், எடையைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை எனப் திட்டவட்டமாக கூறியுள்ளார். சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் யூகங்களே என்று விளக்கம் அளித்தார். பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், நாட்டில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க தேவையான இருப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடும் ஏற்படாத வகையில் போதிய இருப்பு உள்ளதாகவும் ,14.2 கிலோ சிலிண்டர் விநியோகம் வழக்கம் போலவே எந்த எடை குறைப்பும் இன்றி தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், ‘சிலிண்டர் தட்டுப்பாடு’ எனும் பதற்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த முன்பதிவுகள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் அனைவரும் காஸ் முகவர்களின் அலுவலகங்களில் வரிசை கட்டி நிற்காமல், ஆன்லைன் மூலமாக சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன் விநியோகம் தடங்கல் இல்லாமல் நடைபெறும் எனவும் சுஜாதா சர்மா உறுதி அளித்துள்ளார்.