

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். "வெற்றி நிச்சயம், விழிப்புடன் இருப்பது அவசியம்" என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள அக்கடிதத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திமுகவினரின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளிலும் தொடர்ந்திட வேண்டும் என்று கூறியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்வதற்கான களம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனர்.
வாக்குப்பதிவன்று BLA2 மற்றும் BLC, BDA ஆகியோர் தங்களது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தங்களது பாகத்தில் உள்ள கழக ஆதரவு, தோழமைக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளையும், விரைந்து பதிவு செய்திடவும் ஒருவர் கூட விடுபடாத வகையிலும் கழக நிர்வாகிகள் ஆவண செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள்(பூத் ஏஜென்ட்கள்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள்(பூத் ஏஜென்ட்கள்) எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17c யில் கையொப்பமிடக்கூடாது என்றும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே கையொப்பமிட்டு நகல் பெற வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.