

நாட்டில் சட்டமன்ற ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியம். இதற்கு முன்பு வரை காவல்துறையில் ஒரு வழக்கு பதிவானால், அது முற்றிலும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படும். அதோடு நீதிமன்றங்களில் காவல் துறையினர் ஆவணங்களை சமர்ப்பிப்பதும் காதித வடிவிலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் காவல்துறையினரின் வேலைப்பளுவை குறைக்கும் விதமாக ஆன்லைன் மயமாக மாறியுள்ளது காவல் துறை ஆவணங்கள். இதற்காக CCTNS 2.0 என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் ஒரே பிணையத்தின் கீழ் இணைக்கப்படுவதால், குற்றவாளிகளைக் கண்காணிப்பது மிகவும் எளிதாகிறது.
தமிழ்நாடு காவல்துறை CCTNS 2.0 (குற்ற மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்புகள்) என்ற புதிய மென்பொருளைப் பயன்படுத்தி முழுமையாக ஆன்லைன் மயமாகி வருகிறது. ஏற்கனவே புகார் அளித்தல், ஆவணங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் காவல் துறை சரிபார்ப்பு போன்ற பல சேவைகளை அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக பொதுமக்கள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதன்மூலம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் நேரில் செல்வதை தவிர்க்க முடியும்.
இந்நிலையில் தற்போது காவல் துறை அதிகாரிகளும் FIR மற்றும் குற்ற சம்பவ ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றங்களுக்கு ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்கும் புதிய வசதி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. CCTNS 2.0 என்ற மென்பொருளின் மூலம் தமிழ்நாடு காவல் துறை முழுமையாக ஆன்லைன் மயமாகி வருகிறது.
இனி இதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை, விசாரணை அறிக்கை மற்றும் FIR உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் ஆன்லைனில் அனுப்பலாம். இந்த புதிய வசதியின் மூலமாக ஆவணங்கள் தொலைந்து போவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் காவல்துறையினரின் வேலைப்பளுவும் குறையும். அதோடு, தங்கள் பணிகளை விரைந்து முடிக்க இந்த புதிய வசதி உதவியாக இருக்கும்.
CCTNS 2.0 என்ற மென்பொருள் சிறை, தடயவியல் மற்றும் குற்றவியல் உள்ளிட்ட துறைகளில் காவல் துறையின் பணிகளை விரைவுபடுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
CCTNS 2.0 என்ற மென்பொருள் மூலம் காவல் துறை உயர் அதிகாரிகள் ஒவ்வொரு காவல் நிலையத்தையும் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இதன்மூலம் அனைத்து காவல் நிலையங்களும், டிஜிட்டல் முறையில் உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றத்தைக் கண்டு வரும் நிலையில், காவல்துறையின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய மென்பொருள், காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதன் மூலம் காவல்துறை அதிகாரிகள் நிலுவையில் இருக்கும் மேலும் பல வழக்குகளை விசாரிக்க போதிய கால அவகாசம் கிடைக்கும். தமிழக காவல் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.