

சிவசேனா கட்சியின் மூத்த பிரமுகர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எழுதிய புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP)தேசிய ஒருங்கிணைப்பாளாருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் ராவத் எழுதியுள்ள ‘அன்லைக்லி பாரடைஸ்’ என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் பேசிய அவர், ‘2026-ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார். அவரும் அமித் ஷாவும் வெளியேறப் போகிறார்கள், அவர்களின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது...’ என்றார்.
மேலும் அவர், தனது ‘மனமும் அரசியல் புரிதலும்’ பிரதமர் மோடி 2026 வரை பிரதமராக நீடிக்க மாட்டார் என்பதையே உணர்த்துவதாகவும், ‘மோடி மற்றும் அமித்ஷா இருவரின் ஆட்சியும் முடிவுக்கு வரும்’ என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
தேர்தல் செயல்முறையைக் குறிவைத்துப் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்கள் (பாஜக) தேர்தலில் வெற்றி பெறுவதாகக் குற்றஞ்சாட்டினார். ‘மோடியின் செல்வாக்கு குறைந்து வருகிறது, ஆனால் அவர் இன்னும் தேர்தலில் வெற்றி பெறுகிறார். இதற்கு யார் காரணம்? அது தேர்தல் ஆணையம்தான்’ என்றார். மேலும் மோடி அரசு நேர்மையற்றவர்கள் அனைவரையும் தனது கட்சியில் சேர்த்துக்கொண்டு, நேர்மையானவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்கிறது. தேர்தல் ஆணையத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர்கள் (பாஜக) தேர்தலில் வெற்றி பெறும் விதம் நாட்டிற்கு நல்லதல்ல என்றார்.
ஒரு காலத்தில், மோடிக்கு எதிரான ‘மீம்ஸ்’களைப் பதிவிட்டதற்காகக் கூட மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று, சமூக ஊடகங்கள் விமர்சனங்களால் நிரம்பி வழிகின்றன, இது அவரது செல்வாக்கில் ஏற்பட்ட சரிவைப் பிரதிபலிக்கிறது என்று கெஜ்ரிவால் கூறினார்.
ஊழல் மூலம் தேர்தல்களில் வெற்றி பெறப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், தனது சொந்த அனுபவத்தையே இதற்கு உதாரணமாகக் கூறலாம் என்றும் அவர் கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய இந்த கருத்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.