

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தாலும், உள்கட்டமைப்பு வசதிகள் சற்று குறைவாகவே உள்ளன. இதனால் தான் பொதுமக்கள் சிலர் தனியார் மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைகளை நவீனமாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
இதன் முதல் படியாக புறநோயாளிகள் பிரிவில் OP சீட்டு பெறும் நடைமுறையை எளிதாக்க புதிய செயலி ஒன்றை இன்று (ஜூலை 8) முதல் அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு. ‘நலம் AI’ என அழைக்கப்படும் இந்த செயலியைப் பயன்படுத்தி, இனி வீட்டிலிருந்தே அரசு மருத்துவர்களிடம் சிகிச்சை பெறலாம்.
நலம் AI செயலியை இன்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் தொடக்கி வைக்கிறார்.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முதலில் வரிசையில் நின்று OP சீட்டைப் பெற வேண்டும். அதன் பிறகு தான் மருத்துவரை சந்திக்க முடியும். காலை 6 முதல் மதியம் 1 வரை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் OP சீட்டு வழங்கப்படும். வரிசையில் நின்று OP சீட்டு வாங்கவே அதிக நேரம் எடுத்துக் கொண்டால், மருத்துவர்களை சந்தித்த பிறகு, மருத்துவ சோதனைகள் செய்ய அடுத்த நாள் மீண்டும் மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும்.
இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க தமிழக அரசு நலம் AI செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்ய முடியும். ஆன்லைன் முன்பதிவில் மருத்துவரை சந்திக்க உங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். இந்த நேரத்தில் நீங்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது சோதனை முயறசியாக நெஞ்சக புறநோயாளிகள் பிரிவில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த ஆன்லைன் முன்பதிவு மற்ற பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். மேலும் வாட்ஸ்அப் சாட்போட் மூலமாகவும் மிக எளிதாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
முன்பதிவு செய்யும் முறை:
* 96192 22999 என்ற வாட்ஸ்அப் எண்ணை உங்கள் மொபைல் போனில் சேமித்துக் கொள்ளுங்கள்.
* இந்த எண்ணிற்கு Hi என மெசேஜ் அனுப்பினால், அரசு மருத்துவமனைகளின் பட்டியல் வரும்.
அதில் உங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ், ‘நலம் AI’ செயலியை இன்று சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் மிக எளிதாக சென்றடையும் வகையில் நலம் AI செயலி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் OP சீட்டு பெற வரிசையில் நிற்க வேண்டிய நேரம் மிச்சமாகும். அதோடு வெகு விரைவில் அரசு மருத்துவ சேவைகள் நோயாளிகளுக்கு கிடைக்கும்.
மருத்துவத் துறையில் நலம் AI செயலி புதிய மைல்கல்லாகவும், புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த செயலி வாட்ஸ்அப்பை பயன்படுத்தாத பாமர மக்களுக்கு எப்படி உதவும் என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழ்நாட்டின் ஆன்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகம் தான் என்றாலும், கீபேட் மொபைல் பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர். ஆகையால் அவர்களுக்கும் ஏற்ற வகையில் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கட்டமைக்க வேண்டும்.