

தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு அரசு மருத்துவமனையில் கிடைக்கும் சேவைகள் தெளிவாகவும் எளிதாகவும் கிடைக்க ‘நலம் AI’ செயலியை கடந்த சில தினங்களுக்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ். இந்நிலையில் இன்று தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘நலம் TN’ என்ற இணையதளத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஜோசப் விஜய்.
இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் விஜய் நலம் TN இணையதளத்தை தொடக்கி வைத்தார்.
இந்த விழாவில் ரூ.139.47 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 85 மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்களை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சையை வழங்கும் நோக்கில், தற்போது நலம் TN (www.tnhealthfoundation.org) என்ற இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பதோடு, மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறும்.
இந்த விழாவில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் விஜய். அப்போது மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்க மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார் முதல்வர் விஜய். இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “மண் மீது மக்கள் மீதும் மாறாத அன்பு கொண்டவர் முதல்வர் விஜய். தமிழ்நாட்டில் இப்போது நடப்பது அன்பு சாம்ராஜ்யம். இதை யாராலும் அசைக்க முடியாது.
உண்மையான தலைவர் யார் தெரியுமா? அதிகார நாற்காலியில் உட்கார்ந்து உத்தரவு பிறப்பித்தவர் அல்ல. மக்களின் இதயங்கள் எல்லாம் வந்து அவர்களின் துயர் துடைப்பவரை உண்மையான தலைவர். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் தான் முதல்வர் விஜய்.
நலம் TN இணையதளம் வெளிப்படை தன்மை உடன் செயல்படும். பொதுமக்கள் தாங்கள் விரும்பும் மருத்துவமனைகளுக்கு இந்த இணையதளத்தின் வாயிலாக நன்கொடையை செலுத்தலாம்” என அமைச்சர் பேசினார்.
பணி நியமன ஆணை வழங்கும் இந்த விழாவில், உதவி மருத்துவ அலுவலர்களின் தோள் மீது கை போட்டு சகஜமாக பேசினார் முதல்வர். அதில் ஒரு மருத்துவ அலுவலருடன் மாஸ்டர் படத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சியை ரீ-கிரியேட் செய்தார்.
இதுமட்டுமின்றி சில மருத்துவர்கள் முதல்வரின் ஆட்டோகிராபை பெற்றுச் சென்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழக முதல்வர் விஜய், ஒரு முதல்வராக அல்லாமல் சக நண்பரைப் போல் சகஜமாக பழகியதாக விழாவில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர்.
மாநில பாடல் பாடும் போதெல்லாம், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தைப் பாட மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் முதல்வர் விஜய் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறையின் இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது