

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இருந்து ஊர்ப்புறமான பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்கள் தொகை சுமார் 63.1% உள்ளதாக வரையறுக்கப்படுகிறது. 2024–25 ஆம் ஆண்டுக்கான கணக்குபடி சுமார் 916 மில்லியன் (9.16 கோடி) பேர் கிராமப்புறங்களில் வசிப்பதாக சர்வேக்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப காலத்தில் கிராமப்புற மக்கள் ஆடு மாடுகள் வளர்த்தும், காடு மேடுகளில் அலைந்து உணவு மற்றும் மருத்துவ மூலிகை போன்ற பொருள்களை சேகரித்து அவற்றை நகரங்களில் விற்றும் தங்கள் பொருளாதாரத்தை சமன் செய்தனர்.
காலப்போக்கில் விவசாய நிலங்கள் ஆக்ரமிப்பு நகரங்களை நோக்கி மக்கள் வரத்துவங்க கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முடங்கியது. இதை மீட்கும் விதமாக கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச வருமானப் பாதுகாப்பு வழங்கவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் சம்பளத்துடன் பணிகள் ஏற்படுத்தவும், பணிகளைத் தேடி நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்கவும் மேலும் வறட்சிக் காலம், பயிர் இல்லாத காலங்களில் விவசாயக் குடும்பங்களுக்கு ஆதரவு தரவும் 2005ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தத் திட்டத்தை துவங்கி 2006ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் எந்தவொரு கிராமத்தில் இருக்கும் வயது வந்த குடும்ப உறுப்பினர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் தேவைப்படும் போது அரசு வேலை செய்யக்கூடும் உரிமை வழங்கப்படுகிறது . வேலை நாட்கள் பொறுத்து நேரடி சம்பளம் மற்றும் தற்காலிக வேலைவாய்ப்பு மூலம் வருமானம் மற்றும் அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை பெற வழிவகுக்கும் திட்டமாக மக்களிடையே வரவேற்பு பெற்று நடைமுறையில் சீராக உள்ளது.
இந்த 100 நாள் திட்டத்தில் கல்வெட்டு நீர்ச் சேமிப்பு, நில அபிவிருத்தி, கிராம சாலை பணிகள், கால்நடை நீர் திட்டம், அணைகள், வெள்ள தடுப்பு பணிகள் போன்ற பல வேலைகள் தரப்படுகிறது. பெண்களுக்கு முன்னுரிமையுடன் தரப்படும் இந்தப்பணிகள் கிராமப் பஞ்சாயத்துகள் மூலமாக நேரடியாக வேலை தேவைப்படும் பணியாளருக்கு வழங்கப்படும்.
கிராம மக்களின் வாழ்வாதாரம் மீட்க மத்திய அரசின் திட்டமான இதன் அதிகாரபூர்வ பெயராக Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) என அறிவிக்கப்பட்டது.2005-ல் இந்திய அரசியலமைப்புப் பேரவையால் வெளியிடப்பட்ட சட்டம் 2006-ல் செயல்படுத்தப்பட்டது.
தற்போது (கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்புத் திட்டமான) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் உறுதி யோஜனா “Pujya Bapu Gramin Rozgar Guarantee Yojana” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு வருகிற மக்களவை கூட்டத் தொடரில் மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரக வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில் கூடுதல் வேலை நாட்களை 100-இல் இருந்து 125-ஆக உயர்த்தவும், ஊதியம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை "மகாத்மா காந்தி பெயரில் இருக்கிற இத்திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தேசத்தின் தந்தையின் பெயரைவிட இத்திட்டத்திற்கு வேறு எந்த பெயர் பொருத்தமாக இருக்க முடியும்? நீங்கள் வைக்கப் போகிற புதிய பெயரை வேறு ஏதாவது ஒரு திட்டத்திற்கு நீங்கள் வைக்கலாம்" என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தேசப்பிதாவின் பெயரை மாற்றுவதில் முரணான கருத்துக்கள் இருந்தாலும்
பெண்கள் மற்றும பின்தங்கியவர்கள் கையேந்தாமல் உழைப்பின் மூலம் வரும் வருமானத்துடன் சுயமரியாதையுடன் வாழ வாய்ப்பு தரும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டமாகவே அறியப்படும் இந்தத் நலத் திட்டம் என்பது உண்மை.