விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், மறையூர் கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் ஒரு நிழற்குடைக் கட்டப்பட்டது. இப்போது அந்த நிழற்குடையின் தரையிலிருந்து தண்ணீர் பீச்சி அடித்துக்கொண்டு வநததால், இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட இந்த நிழற்குடையிலிருந்து நீர் பீச்சி அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் கூட்டுக்குடி நீர் குழாயின் மேல் நிழற்குடையை கட்டியதுதான். இதனையடுத்து அதனை சரி செய்யும் பொருட்டு துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் பேருந்து நிழற்குடையில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சில அதிகாரிகளும் ஈடுபட்டனர். மேலும் இந்த நிழற்குடையின் கட்டமைப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்த இரு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இது குறித்து வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது, ”பேருந்து நிழற்குடை கட்டுவதற்கு, தவறான இடத்தை தேர்வு செய்து வேலை வாங்கிய, நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரையும், இளநிலைப் பொறியாளரையும் மாவட்ட ஆட்சியர் செயசீலன் தற்காலிக பணி நீக்க செய்துள்ளார்.
மேலும் நிழற்குடைக்கு தவறான தொழிநுட்ப அறிக்கை தயார் செய்த உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் கூட்டுக்குடி நீர் குழாயின் மேல் நிழற்குடை அமைப்பதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் நிழற்குடை ஒப்பந்த பணி செய்த ஒப்பந்தாரரை கறுப்பு பட்டியலுக்கு மாற்றவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்” இவ்வாறு அவர் கூறினார்.