

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக நீட் (NEET) வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது வருகிறது. இந்த போராட்டத்தை தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக கோரி தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் சமீபத்தில் பல மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு , முன் ஜாமின் வாங்கிய நடிகர் பிரகாஷ் ராஜும் கலந்து கொண்டார்.
இந்த போராட்டம் நீண்ட நாட்களாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த சோனம் வாங்சுங் சில நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற உத்தரவுப் படி ஊசி மற்றும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் போராட்டத்தை வேகப்படுத்த நினைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும், என்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அனுமதியின்றி நடைபெற்ற இந்த பேரணியை கலைந்து போகுமாறு பலமுறை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த கூட்டத்தை கலைந்து போகுமாறு கூறி காவல்துறையினரும் அதிரடிப் படையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களை மீறி போராட்டக்காரர்கள் பேரணி நடத்த முயன்றதால் , கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கையை மீறி சென்றதால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத மாணவர்கள் பலரும் அங்கும் இங்கும் ஓடி காயம் பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு போராட்ட களத்தில் இறங்கியது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மதியத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்தினை, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இருந்து தொடங்கியது. அவர் வீட்டில் கூடிய காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து பிரதமர் வீடு உள்ள , லோக் கல்யாண் மார்க்கை நோக்கி பேரணியாக செல்லத் தொடங்கினர். இந்த பேரணியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு , மத்திய அரசுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
இந்த பேரணியின் பொழுது மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியது மட்டுமல்லாமல் , உள்துறை அமைச்சர் அமித் ஷா , பிரதமர் நரேந்திர மோடி , தலைமை நீதிபதி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்த டெல்லி காவல்துறையினர் , போராட்டக்காரர்கள் வரம்பினை மீறி கடும் வன்முறையான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், அரசு வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்பட 118 காவலர்கள் காயமடைந்ததாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்தினால் டெல்லி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது