

ஏப்ரல் 1-ம்தேதி முதல், தங்கக் கடன் விதிமுறைகளில் முக்கியமான மாற்றங்கள் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய தங்கக் கடன் விதிமுறைகள்படி , அடகு வைத்த தங்கத்தை 7 நாட்களில் திரும்ப ஒப்படைத்தல், 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை அடுக்குமுறை LTV (தங்கத்தின் மதிப்பில் கடன்), தூய்மைச் சான்றிதழ் கட்டாயம் மற்றும் 12 மாதங்களுக்குள் 'புல்லட்' திருப்பிச் செலுத்தும் முறை போன்ற முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன.
இனிமேல் உங்களது தங்க நகைகளை அடகு வைப்பதற்கு முன், கடன் பெறும் ஒவ்வொருவரும் இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வது அவசியம். புதுப்பிக்கப்பட்ட தங்கக் கடன் வரம்புகள் குறித்தும், உங்கள் தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் உண்மையில் எவ்வளவு கடன் பெற முடியும் என்பது குறித்தும் விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.
முன்பு வங்கிகளும், NBFC-களும் தங்கத்தின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் கிடைக்கும் என்ற ஒரே விதிமுறை இருந்தது.
ஆனால் 2026 ஏப்ரல் 1 முதல் இது 'Tiered Loan-to-Value (LTV)' அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அடுக்கு தர நிலை அடிப்படையில் தங்க கடன் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, கடன் தொகைக்கு ஏற்ப LTV மாறும்.
உங்கள் கடன் தொகை ₹2.5 லட்சம் வரை இருந்தால், உங்கள் தங்கத்தின் மதிப்பில் 85% வரை நீங்கள் கடனாகப் பெறலாம். அதுவே ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரையிலான கடன்களுக்கு, இந்த வரம்பு 80% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ₹5 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெற விரும்பினால், வழங்கப்படும் கடன் தொகையானது தங்கத்தின் மதிப்பில் 75% ஆக மட்டுமே வரையறுக்கப்படும். இதன் பொருள் என்னவென்றால், உங்கள் தங்கத்தின் முழு மதிப்பையும் நீங்கள் கடனாகப் பெற முடியாது.
அதேபோல் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கியக் கட்டுப்பாடுகளும் உள்ளன. ஒரு நபர் அதிகபட்சமாக 1 கிலோ தங்கத்தை மட்டுமே அடகு வைத்து கடன் வாங்க முடியும். தங்க நாணயங்கள் (Gold coins) மூலம் பெறும் கடன்களுக்கு 50 கிராம் என்ற வரம்பு உள்ளது; மேலும், தங்கக் கட்டிகள் அல்லது பிஸ்கட்டுகள் (Gold bars/biscuits) கடனுக்காக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் தூய்மை குறித்த சான்றிதழை வழங்க வேண்டும் மற்றும் தங்கத்தின் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
"புல்லட்" (Bullet) திருப்பிச் செலுத்தும் முறையின் கீழ் உள்ள கடன்கள் 12 மாதங்களுக்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
அனைத்து வட்டி விகிதங்கள், அபராதங்கள் மற்றும் கட்டணங்கள் வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
மற்றொரு முக்கியமான காரணி தங்கத்தின் மதிப்பீடு ஆகும். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடந்த 30 நாட்களின் சராசரி விலை அல்லது முந்தைய நாளின் நிறைவு விலை, இவ்விரண்டில் எது குறைவாக உள்ளதோ அதன் அடிப்படையில் உங்கள் தங்கத்தின் மதிப்பை கணக்கிடுவார்கள். அதாவது இந்த விலை, Indian Bullion and Jewellers Association (IBJA) அல்லது SEBI பதிவு செய்யப்பட்ட அமைப்புகளின் தரவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இது வங்கிகளுக்கும், நுகர்வோருக்கும் பாதுகாப்பான முறையாக கருதப்பட்டாலும் இது நீங்கள் பெறும் கடன் தொகையை நேரடியாகப் பாதிக்கும்.
தங்கக் கடன் பெறத் திட்டமிடுபவர்களுக்கும், கடன் வாங்கும் போது ஏற்படும் தவறுகளைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கும், நிதி சார்ந்த விதிமுறைகளை எளிய முறையில் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.