புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில், சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆய்வாளர்கள், "அந்த மணிகள் துளையிடத் தொடங்கி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது போன்று காட்சியளிக்கின்றன. முழுமையானதாகவும், முழுமை பெறாத நிலையிலும் கிடைத்துள்ள இந்த மணிகள், பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது" என தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டை நேற்று காலை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் குறைந்து 6,550 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை மேலும் ரூ.60 குறைந்து ஒரு கிராம் 6,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. விதிமுறை மீறல் நடந்துள்ளது, ஆனால், ஒட்டு மொத்த நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், 2 இடங்களில் நடந்த நீட் வினாத்தாள் கசிவுக்காக ஒட்டுமொத்த மாணவர்களையும் துன்புறுத்தக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கருணை மதிப்பெண் உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களை நாடலாம் என்றும் கூறியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான டி-20 ஆசிய கோப்பை 9வது சீசன் நடந்து வருகிறது. நேற்று நடந்த 'ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதின. முதலில் 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டிங் தேர்வு செய்தார். போட்டி முடிவில் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.