

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபீன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவின் தலைவர்கள் வரிசையில் 12-வது தலைவர் ஆவார் (சுழற்சி முறையில் 15-வது தலைவர்).
பாஜகவில் ஒரு தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். பாஜகவின் 11ஆவது தேசிய தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20ஆம் தேதி பொறுப்பேற்றார். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்து விட்ட போதிலும், சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் பீகார் மாநில மந்திரியாக இருந்த நிதின் நபின் கட்சியின் செயல் தலைவராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக 12வது தேசியத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று (19ஆம் தேதி) பெறப்பட்டன.
இப்போதைய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் நிதின் நபின் சார்பில் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி டாக்டர் கே.லட்சுமணிடம் வழங்கினர். வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளது. எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபீனுக்கு இசட் பிரிவு ஆயுத பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை இன்று அறிவித்தது. இனி அவர் நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, ஆயுதம் ஏந்திய CRPF வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.