

"நான் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளேன். பீகாரில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு என் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும்", பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் முதல்வராக உள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமார் இன்று ராஜ்யசபா எம்பி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அவர் தனது முதல்வர் பதவியை பாஜகவிடம் விட்டுக் கொடுத்துவிட்டு ராஜ்யசபா எம்பி யாக தொடர உள்ளார். இதன் மூலம் அவர் மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலுக்குள் நுழைகிறார். விரைவில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் நீண்ட காலம் முதல் மந்திரியாக இருந்த பெருமைக்கு சொந்தக்காரரான நிதிஷ்குமார் கடந்த நவம்பர் மாதம் தான் 10வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றார். இவர் பதவி விலகுவதாக அறிவித்ததும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலம் பீகார் முதல்வராக பதவியில் இருந்த நிதிஷ்குமார் தேசிய அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இவர் ஏற்கனவே பீகார் சட்டசபை, சட்ட மேல்சபை, லோக்சபா உறுப்பினராக இருந்துள்ளார். தற்பொழுது ராஜ்யசபாவுக்கு தேர்வான பிறகு நான்கு சபைகளிலும் உறுப்பினராக இருந்த தலைவர்களில் ஒருவராக திகழ்வார்.
ராஜ்யசபா எம்பி ஆகும் நிதீஷ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது:
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பீகார் மக்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறார்கள். இதனால் தான் நாங்கள் பீகார் மக்களுக்காக முழுமையான விசுவாசத்துடன் சேவை செய்து வருகிறோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் காரணமாகவே பீகார் மாநிலம் இன்று வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் பலமுறை உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளேன். பீகாரில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு என் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் எப்பொழுதும் இருக்கும். - இவ்வாறு நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
பீகாரில் முதல்முறையாக பாஜகவின் ஆட்சி அமைய உள்ளது. பீகாரில் இதுவரை பாஜக ஆட்சி அமைந்ததே இல்லை. முதல்வராக ஒருவர் கூட பாஜகவில் இருந்தது இல்லை. ஆனால் தற்போது நிதிஷ் குமார் ராஜினாமாவால் பாஜக சார்பில் புதிய முதல்வர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரில் முதல்வர் ரேசில் 4 தலைவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. பாஜகவின் சாம்ராட் சவுத்ரியின் பெயர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் நித்தியானந்த் ராயும், பீகாரில் தொழில்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவின் திலீப் ஜெய்ஸ்வால் மற்றும் திகா எம்.எல்.ஏ சஞ்சீவ் சவுராசியா ஆகியோரும் முதல்வர் பதவிக்கான ரேசில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.