என்எல்சி விரிவாக்கம்: விளைநிலங்களில் ஜே.சி.பி இயந்திரம் இறக்கப்பட்டதால் விவசாயிகள் போராட்டம்!

என்எல்சி விரிவாக்கம்: விளைநிலங்களில் ஜே.சி.பி இயந்திரம் இறக்கப்பட்டதால் விவசாயிகள் போராட்டம்!

கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்க கூடிய என்எல்சி தொழிற்சாலையில் இரண்டாவது ஆலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பணியின் போது விளைநிலங்களுக்குள் ஜேசிபி இயந்திரங்கள் இறக்கப்பட்டு விளைநிலங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.பல இடங்களில் சாலை மறியல், என்எல்சி விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் முற்றுகை என்று தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும்  தற்போது போராட்டத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது என்எல்சி இரண்டாவது ஆலை விரிவாக்க பணி 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதற்கு முன்பே விரிவாக்கத்திற்காக இடம் கையகப்படுத்தும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. 11 கிலோமீட்டர் கொண்ட இந்த விரிவாக்க திட்டத்தில் தற்போது ஒன்றரை கிலோ மீட்டர் நிலங்கள் மட்டுமே மீதம் உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பணியை தொடங்குவதற்காக தொடர்ந்து விவசாயிகளுடன் பலக்கட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் கருத்துக்களை ஏற்று பல்வேறு சிறப்பு சலுகைகள், கருணைத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கிய இழப்பீடு மட்டும் போதாது தற்போது விவசாயிகள் அந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அவர்களுக்கு   உரிய, உயரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இழப்பீடுகளை பெற்று தந்துள்ளார். இவ்வாறு 10 வருடங்களுக்கு முன்பு இரண்டு லட்சம் இழப்பீடு அளிக்கப்பட்ட நபர்களுக்கு தற்போது 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.  ஹெக்டர் ஒன்றிற்கு 15000 கூடுதல் இழப்பீடும், இவ்வாறு 39 ஹெக்டேர் நிலங்களுக்கு சொந்தமான 74 விவசாயிகளுக்கு  வழங்கப்பட உள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணிக்கான ஒப்புதல் முன்பே விவசாயிகள் அளித்துள்ளனர். ஆனாலும் பணிகள் மேற்கொள்வது ஏற்பட்ட காலதாமதத்தின் காரணமாக என்எல்சி நிர்வாகம் விவசாயிகள் இந்த நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. அப்படி வழங்கப்பட்ட அனுமதியில் தான் தற்போது விவசாயிகள் விவசாயம் செய்தனர். இதைத் தொடர்ந்து தற்போது கனரக வாகனங்களைக் கொண்டு விளைச்சல் அளிக்கப்பட்ட நடவடிக்கை தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய, உயரிய இழப்பீடு வழங்க அறிவுறுத்தி உள்ளோம்.

பெரும்பான்மையான விவசாயிகள் இடத்திற்கு ஒப்புதல் வழங்கி விட்டனர். ஒரு சில விவசாயிகள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கு  லோக் அதாலத் நீதிமன்றத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  என்எல்சி விரிவாக்க பணிகள் நடைபெறும் அதே நேரம் விவசாயிகளின் பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com