

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக, அமெரிக்க மக்கள் பெரிய அளவில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அமெரிக்க குடிமக்கள் இந்த போராட்டத்திற்கு 'நோ கிங்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் போராட்டம் ட்ரம்பின் குடியுரிமை தொடர்பான புதிய சட்ட விதிகளுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 28 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஆதரவு கிடைத்துள்ளது. 50 மாநிலங்களில் உள்ள 3300 நகரங்களில் இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 80 லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. சமீபத்திய காலத்தில் இந்த அளவில் குடிமக்கள் கூடி போராட்டம் நடத்தியது இல்லை. இந்தப் போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய மாநகரங்களான நியூயார்க், புரூக்ளின் உள்ளிட்ட பல பகுதிகளில் அமெரிக்கர்கள் குடும்பத்துடன் வீதியில் இறங்கி போராடினார்கள்.
இந்த போராட்டங்களுக்கு மையப் புள்ளியாக மினசோட்டா மாநிலத்தின் செயின்ட் பால் நகரம் இருந்தது. கடந்த ஜனவரி மாதம், மினியாபோலிஸில் உள்ள குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரிகளால் ரெனி குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி என்ற இரு குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதனால் அப்போதே மக்களின் போராட்டம் வெடித்து வன்முறையில் முடிந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் மூன்றாவது போராட்டம் இதுவாகும்.இது டிரம்பின் ஜனாதிபதிப் பதவிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெர்னி சாண்டர்ஸ் என்ற உள்ளூர் தலைவர் போராட்டத்திற்காக கூடிய மக்களின் ஒற்றுமையை பாராட்டினார். அவர் இந்த போராட்டம் டிரம்ப்பிற்கு மட்டும் எதிரானது அல்ல, எலான் மஸ்க், பெசோஸ் மற்றும் ஜுக்கர்பெர்க் போன்ற பெரும் கோடீஸ்வரர்களின் ஆதிக்கத்திற்கு எதிரானது" என்று தெரிவித்தார்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் "மன்னர்கள் வேண்டாம், பாசிஸ்டுகள் வேண்டாம்", " குடிவரவு சட்டங்கள் வேண்டாம்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
நாடு தழுவிய அளவில் நடைபெற்ற, இந்த எழுச்சிமிகு போராட்டம் வரக்கூடிய தேர்தலில் பிரதிபலிக்கும் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். போராட்டக்காரர்கள் ஈரான் மீதான போரினை நிறுத்துமாறு புதிய கோரிக்கையும் சேர்த்துக் கொண்டனர்.
கடந்த போராட்டங்களில் குடிமக்கள் அமெரிக்க கொடிகளை ஏந்தியே அதிக அளவில் பங்கு பெற்றனர். ஆனால் இந்த முறை போராட்டத்தில் அமெரிக்க கொடிகளை அதிக மக்கள் பயன்படுத்தவில்லை.
அதைப்போல் கருப்பின மக்களும் இந்த போராட்டத்திற்கு பெரிய அளவில் எந்த ஒரு ஆதரவும் கொடுக்கவில்லை. அங்கு தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாததால் அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக அமெரிக்காவில் குடியரசு கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதை இந்த போராட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
அமெரிக்க கருப்பின மக்களின் தலைவர்களில் ஒருவரான ஜான் ஈ. வாரன் , அமெரிக்காவில் நடைபெறும் இந்த பெரிய போராட்டத்தில், கருப்பின மக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதன் மூலம் ரஷ்யா, ஹங்கேரி போன்ற சர்வாதிகார நாடாக அமெரிக்கா மாறுவதிலிருந்து விடுபடும் என்றும் அவர் கூறினார்.