

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவில்' பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுவதோடு, தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோவில் கேரளா கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு, தினசரி பூஜைகள், சிறப்பு விழாக்கள், திருமணங்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுதல் போன்றவை பிரசித்தி பெற்றவை.
இதனால் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாதாரண நாட்களில் 30 ஆயிரம் பேரும் விடுமுறை நாட்களில் 60 ஆயிரம் பேரும் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இது தவிர ஏகாதசி, உற்சவம் போன்ற விசேஷ காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டுவதால் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதனால் பக்தர்களின் வசதிக்காக வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்ப்பதற்காக விமான நிலையங்களில் நடைமுறையில் இருக்கும் ஃபேஸ் ஆப் என்ற புதிய தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதன்படி கோவிலை சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் பேஸ் ஆப் கவுண்டர்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
பேஸ் ஆப் திரை முன்பாக நின்று முகத்தை காட்டினால் விமான நிலையத்தில் நுழைந்ததும் அவருடைய விபரங்கள் ஆதார் போன்ற அடையாள அட்டைகளின் வாயிலாக சரிபார்க்கப்படும்.
இதே போல பயணிகள் பேஸ் ஆப் கவுண்டர்களின் ஸ்கேனரில் முகத்தை காட்டினால் ஸ்கேன் செய்து அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அவருக்கான தரிசன நேரம் குறித்த டோக்கன் வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 200 பக்தர்கள் ,காத்திருக்கும் பகுதியில் 12 பிரிவுகளாக பிரிக்கப்படுவர்.பிறகு டோக்கன் எண்கள் அங்குள்ள திரையில் தோன்றும் .அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு சென்றால் போதுமானது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாக அதிகாரி வினய்குமார் கூறியுள்ளார்.