இனி நோ ஸ்விக்கி, சொமேட்டோ… கேஎஃப்சி, பெப்சியும்தான் - தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி!

KFC, Pepsi, Coke
KFC, Pepsi, Coke
Published on

அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததை எதிர்த்து, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கப் பொருட்களையும், அதன் நிறுவனங்களின் தயாரிப்புகளையும் இனி புறக்கணிக்கப் போவதாக சங்கத் தலைவர் வெங்கடசுப்பு அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவின் இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 25% வரி இருந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதமாக மேலும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு, இந்தியாவின் ஜவுளி, ஆபரணங்கள், தோல் பொருட்கள், கடல் உணவுகள், இயந்திரங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஏற்றுமதி துறைகளை கடுமையாகப் பாதிக்கும்.

இந்த நடவடிக்கையால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் வர்த்தக இழப்பை எதிர்கொண்டுள்ளன. இந்த வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியாளர் லாபத்தை குறைத்து, நீண்ட கால ஏற்றுமதியையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்திய அரசு இந்த வரி விதிப்பை "நியாயமற்றது" என கண்டித்துள்ளது. பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா தனது ஏற்றுமதியை பிற 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவின்படி, கோக், பெப்சி போன்ற அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களும் ஹோட்டல்களில் இனி பரிமாறப்படாது. அதற்குப் பதிலாக, இந்தியாவில் தயாராகும் தரமான மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
லண்டன் நகரின் 'பிக் பென்': பெரிய கோபுரமா? பெரிய மணியா?
KFC, Pepsi, Coke

இது மட்டுமல்லாமல், அமெரிக்காவைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செயலிகளையும் புறக்கணிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கு மாற்றாக, தமிழகத்திற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ZAAROZ என்ற புதிய உணவு டெலிவரி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடலூரைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, முதன்முதலில் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது, தற்போதுள்ள டெலிவரி ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த முடிவு இப்போது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com