

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வரலாற்றில் முதல்முறையாக கடந்த தேர்தல்களைக் காட்டிலும், இம்முறை வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன்படி தமிழ்நாட்டில் 4,88,27,812 வாக்குகள் பதிவாகின.
SIR நடவடிக்கைக்குப் பின் தமிழ்நாட்டில் 6.29 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்தது. இருப்பினும் கடந்த தேர்தலை விடவும் இம்முறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 26 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி, 75,064 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது, எந்த வாக்குச்சாவடியிலும் வன்முறையோ அல்லது முறைகேடோ நடக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒரு சில வாக்குச் சாவடிகளில் இயந்திர கோளாறு காரணமாக சில மணி நேரங்கள் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், 6 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு சுமூகமாக முடிந்துள்ள நிலையில், வருகின்ற மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்க தங்களின் பிரதிநிதிகளை அனுப்புமாறும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்தின் உள்சுற்றுக்கு வெளியே தங்கி கண்காணிக்கலாம் என வேட்பாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியால் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்காக காப்பறையின் கண்காணிப்பு கேமிரா ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இம்முறை நான்கு முனைப் போட்டி நிலவுவதால், எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதை கணிப்பது கூட கடினமாகவே இருக்கிறது. இருப்பினும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளது.