இந்தியாவில் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை இன்று (வியாழக்கிழமை) முதல் பெய்யத்தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், முன்னுரிமை (Priority) மற்றும் முன்னுரிமையற்ற (Non-Priority) குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது..
இந்நிலையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 - 35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும், நவம்பர் மாத ஒதுக்கீடான 12 - 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
நவம்பர் மாத அரிசியை, அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்திலும் தங்களுக்குரிய அரிசியினைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 2.20 கோடி ரேஷன் கார்டுகளுக்கு அரிசி தவிர கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மாநில அரசால், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள, 67 சதவீதம் மக்களுக்கு இந்திய உணவு கழகம் மூலம் மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோ அரிசியை 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, 30 ரூபாய் மானியம் போக, மாநில அரசுகளுக்கு கிலோ 3 ரூபாய்க்கு வழங்கி வந்தது.
தமிழக அரசு அந்த 3 ரூபாயையும் மானியமாக அறிவித்து, ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசியை வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்துக்கு தேவையான ரேஷன் அரிசி மற்றும் கோதுமை முழுவதையும், மத்திய அரசு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.