

நாட்டில் பொதுமக்கள் அனைவரும் வங்கி சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவை முக்கிய ஆவணங்களாக இருக்கின்றன.
பொதுவாக ஒரு நாளைக்கு ரூ.50,000-க்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால், பான் கார்டு விவரங்களை வங்கிகள் கேட்கும். ஆனால் பணத்தை டெபாசிட் செய்யும் போது பான் கார்டை வங்கிகள் கேட்பதில்லை.
இந்நிலையில் தற்போது ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேலான பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது வங்கி கணக்கில் இருந்து எடுத்தாலோ பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும் என வருமான வரித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2025-26 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31ஆம் தேதி உடன் முடிவடையும் நிலையில், 2026-27 நிதியாண்டுக்கான வருமான வரி வரைவு விதிகளை இன்று வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.
தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்காலத்திற்கு ஏற்ற வகையில் வருமான வரிச் சட்டங்களை புதுப்பிக்க, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்பதற்காக, புதிய வருமான வரி விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது வரைவு விதிகள் வெளியாகி உள்ள நிலையில் மார்ச் முதல் வாரத்தில் இறுதியான புதிய வருமான வரிச் சட்டம் விதிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வருமான வரிச் சட்டம் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வருமான வரிச் சட்டத்தில் உள்ள 511 விதிகள் 333 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 399 படிவங்கள் 190 படிவங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
* வருமான வரி விதி 2026-ன் படி, ஒரு நபர் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணத்தை எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
* ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பரிவர்த்தனைகள் மேற்கொண்டால், பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
* ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேலான பணப் பரிவர்த்தனைகள் நிகழும் வங்கி கணக்கு விவரங்களை, வருமான வரித் துறையிடம் வங்கிகள் சமர்ப்பிக்கும்.
* இனி ரூ.5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகனங்களை வாங்கினால் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதேபோல் கார் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம்.
* ஹோட்டல் பில் தொகை இதற்கு முன்பு வரை ரூ.50,000-ஐ கடந்தால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த பில் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அசையா சொத்துக்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான உச்ச வரம்பு ரூ.20 லட்சத்தைக் கடந்தால் மட்டுமே இனி பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
* காப்பீடுகளை எடுக்கும் போதும், கிரிப்டோ கரன்சி பணப் பரிமாற்றத்திற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* கிரிப்டோ கரன்சி பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் இனி வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.