

வினாத்தாள் கசிவால் மே 3 நடந்த NEET-UG தேர்வு ரத்தான நிலையில் அதற்கு செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு மே 27 வரை விவரங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு வினாக்கள் கசிந்துள்ள நிலையில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதில் நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வு ரத்து செய்ததைத் தொடர்ந்து ஜூன் 21 இல் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மேலும் மே 3 தேர்வுக்கு பெறப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.
பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ. 1,700, ஓபிசி பிரிவினர் ரூ. 1,600, எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 1000, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ. 9,500 செலுத்தியிருந்த நிலையில் அவர்கள் தங்கள் பணத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
மே 3 அன்று நடைபெற்ற நீட்-யூஜி(NEET - UG)தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் தேர்வுக்காக செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற மே 27 வரை விண்ணப்ப விவரங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கட்டணத்தை திரும்ப பெற தேவையான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:
தேசிய தேர்வு முகமையின் NTA Official Website அல்லது பிரத்தியேக நீட் இணைய தளத்துக்கு (அதிகாரப்பூர்வ தளம்) சென்று உங்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல்லை(Password) பயன்படுத்தி உள்நழையவும். கட்டணத்தைத் திரும்பப் பெற கோரப்படும் இணைப்பை கிளிக் செய்து, உங்களின் சரியான வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு ஆகியவற்றை உள்ளிடவும். இந்தத் தகவல்கள் கட்டாயமே 27க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை முந்தைய தேர்வுக் கட்டணத்தை மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்.