

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இதனை நிரந்தர குடியுரிமை அட்டை என்றும் அழைக்கிறார்கள். அமெரிக்காவின் கிரீன் கார்டை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு தகுதியும், சில விதிமுறைகளும் உள்ளன.
இந்நிலையில் கிரீன் கார்டு பெறும் நடைமுறையில் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது அமெரிக்க குடியுரிமை வாரியம். இதன்படி இனி தற்காலிக விசாக்கள் மூலம் அமெரிக்காவிற்கு வந்தவர்கள், தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று, அங்குள்ள அமெரிக்க தூதரகம் மூலமாகவே கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்து கொண்டே கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கக் கூடாது என குடியுரிமை வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு வரை H-1B, L-1 மற்றும் F-1 போன்ற தற்காலிக விசாக்கள் மூலம் வந்தவர்கள், அமெரிக்காவில் இருந்து கொண்டே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. ஆனால் இந்த நடைமுறை தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
விசா மூலம் அமெரிக்காவில் தங்கியிருந்தால், I-485 படிவத்தை நிரப்பி கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது அமெரிக்காவில் இருந்து கொண்டே கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கக் கூடாது என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. இதனால், சொந்த நாட்டுக்குச் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும்.
கிரீன் கார்டு சலுகைகள்:
* ஒருவர் கிரீன் கார்டு பெற்றிருந்தால், அமெரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழலாம். அதோடு அவர்களுடைய குடும்பத்தினர் கிரீன் கார்டு பெறுவதற்கும் ஸ்பான்சர் செய்யலாம்.
* சில குறிப்பிட்ட அரசு பதவிகளைத் தவிர அமெரிக்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணி புரியும் வாய்ப்பு வழங்கப்படும்.
* அமெரிக்க கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்.
* கிரீன் கார்டு பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். நீங்கள் அமெரிக்க மணமகள்/மணமகளை திருமணம் செய்திருந்தால் 3 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:
1. உங்கள் குடும்ப உறுப்பினர் மூலர் கிரீன் கிர்டு பெற ஸ்பான்சர் செய்யப்பட்டால், I-130 அல்லது I-140 என்ற படிவத்தை நிரப்பி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
2. உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், நேர்காணலுக்கு ஒரு குறிப்பிட்ட தேதி ஒதுக்கப்படும்.
3. அந்த தேதியில் நீங்கள் சென்ற, கிரீன் கார்டு பெற விரும்புவதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
ரரஅமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள், திறமையான வெளிநாட்டுப் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கு பரிந்துரை செய்யலாம். இதில் 5 பிரிவுகள் (EB-1 முதல் EB-5 வரை) உள்ளன. இந்தப் பிரிவுகளில் சிறந்த ஆராய்ச்சியாளர்கள், முதலீடடாளர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள் மற்றும் திறமையான ஊழியர்கள் அடங்குவர்.
பொதுவாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையிலேயே கிரீன் கார்டு ஒதுக்கப்படும். அந்த சதவீதத்திற்குள் தான் மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்கப்படும்.
ஏற்கனவே அமெரிக்காவில் இந்தியர்கள் பலர் தங்கி இருப்பதால், புதிதாக விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு பெறுவதில் நிச்சயமாக காலதாமதம் ஏற்படும்.