

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கரூரில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் நகரில் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தின் பிரச்சார நிகழ்ச்சியின் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர்களை நேரில் சந்தித்து தன்னுடைய இரங்கலை தெரிவித்தார். இருப்பினும் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தை நேரில் சென்று இரங்கல் தெரிவிக்காமல் அவர்களை சந்திப்பதற்காக சென்னைக்கு அழைத்த விஜயின் செயல் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் கரூர் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து மாநிலத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கை பாதிக்கும் என்றும், சாட்சிகளை கலைக்கும் செயல் இது என்றும் கூறி 'நாம் தமிழர்' கட்சியின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு தனியார் கட்சியின் கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு அரசுப் பணம் மற்றும் வேலை வாய்ப்பை வழங்குவது வரி செலுத்தும் மக்களுடைய பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், இது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்றும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அரசுப் பணிக்கு பதிலாக தமிழகத்திற்காக எல்லையில் உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே முந்தைய அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், அரசுப் பணி தேவையில்லை என்றும் கட்சிகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து உதவிகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் விஜய் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூர் செல்ல இருக்கிறார். அவரது பயணத்தின் ஒரு பகுதியாக அவர் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்பார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இதைத் தொடர்ந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான ஆவணத்தையும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட துறைகளில் பணி ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது. இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு அரசுப் பணி கொடுப்பது குறித்து பல விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜோசப் விஜய் கரூர் செல்வது இதுவே முதல் முறை என்பதால், இது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.