

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டமன்ற தேர்தலில் விஜய் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.
அதன் பின் முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அதேவேளையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
காலியான 7 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கரூர், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டதால், அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதன் காரணமாக, நீதிமன்றத் தடை இல்லாத மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கல்: செப்டம்பர் 9
வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை & முடிவுகள்: அக்டோபர் 9
இந்நிலையில் 2 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி விரைவில் அறிவிக்க உள்ளது என தகவல் வெளியானது. இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் சென்னையில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் சீமான் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரந்தூரில் சிப்காட் என்ற பெயரில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். விமான நிலையத்தை ரத்து செய்துவிட்டு இப்போது சிப்காட்டை அமைக்கிறார்கள் என்றார்.