

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் தவெக ஆதரவு கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
தவெக கூட்டணி கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் உருவான புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் காங்கிரசின் மாணிக்கம் தாகூர், விசிகவின் திருமாவளவன், மதிமுகவின் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொகிதீன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கூட்டணியின் பெயர் இறுதி செய்யப்பட்டு புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது. கூட்டணி தலைவராக முதல்-அமைச்சர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 2 தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் தவெகவின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், துரை வைகோ எம்.பி., அமைச்சர் ஷாஜகான், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனை கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ‘முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத் தலைமையிலான கூட்டணியின் தலைவர் முதலமைச்சர் விஜய். மேலும் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி, தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும்’ என்று கூறினார். மேலும் தமிழகத்தின் உரிமைக்காக போராடும் கட்சிகள் தவெக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன என்று கூறினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.
கடந்த ஜூன் 1-ம்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் புதிய கூட்டணிக்கான கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற நிலையில் தற்போது 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் பனையூரில் நடைபெற்றுள்ளது.