
வடக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (13-ம்தேதி) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (14-ம்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த ஏழு தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
அந்தவகையில் இன்று (14-ம்தேதி) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை15-ம்தேதி (நாளை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
ஜூலை 16-ம்தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூலை 17-ம்தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருவள்ளூர், தேனி, காஞ்சிபுரம், திண்டுக்கல், ராணிபேட்டை ஆகிய 6 மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18-ம்தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 19 மற்றும் 20 ஆகிய 2 தேதிகளில் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 17-ம்தேதி முதல் 19-ம்தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜூலை 18-ம்தேதி முதல் 20-ம்தேதி வரை கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்ப சலனம் காரணமாக நகரின் ஒருசில பகுதிகளில் இரவு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையல் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.