

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று 2.5 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50 ஆவது கூட்டத்தில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு நீர்வளத்துறை செயலர் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ரா. சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் உள்ள தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர் மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட ஆணையம், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.கே. ஹல்தார் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மே மாதத்திற்கான நீர் பங்கீட்டை உறுதி செய்ய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.