

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம் போன்ற டிபன் ஐட்டங்களின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அம்மா உணவகங்களுக்கு தேவையான 300 சிலிண்டர்களில் 150 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் காலை மற்றும் இரவு நேர டிபன் வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்பொழுது அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் கலவை சாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் கீழ் 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி 1 ரூபாய், பொங்கல் 5 ரூபாய், மதிய நேரத்தில் 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு லெமன் சாதம் மற்றும் சாம்பார் சாதம் கறிவேப்பிலை சாதம். இரவு 3 ரூபாய்க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமையல் கேஸ் தட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டாலும் பெரும்பாலான இடங்கள் தொடர்ந்து செயல்பட்டன. சில அம்மா உணவகங்களில் விறகடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்பொழுது கேஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்தி தற்போது உணவுகள் தயாரிக்கப்பட்டு வருவதன் காரணமாக அம்மா உணவகங்களில் காலையில் பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவு தக்காளி சாதம் என மூன்று வேளைகளிலும் கலந்த சாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு சீரானதும் வழக்கமான உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சிலிண்டர் தட்டுப்பாட்டை மறுத்துள்ள நிலையில், உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும் மெனுவில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.