கேன் தண்ணீர் அதிகம் குடிப்பவரா..? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்..!!

can water
can water
Updated on

சிறு நகரங்கள், பெரு நகரங்கள் என்ற வேறுபாடே இல்லாமல், இன்று அனைவரது வீடுகளிலும் தேவைக்கு ஏற்றார் போல் பிளாஸ்டிக் கேன்களில் கொண்டு வரப்படும் தண்ணீரே குடிப்பதற்கான பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் தற்போது கொளுத்தி வரும் கோடை வெயில் கேன் தண்ணீரையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு? ஆம்..வெயிலில் வைக்கப்படும் கேன் தண்ணீரால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுவாக சூரியனின் நேரடி வெப்பம் மற்றும் புற ஊதாக் கதிர்கள் படும்போது, கேன்களில் உள்ள 'பாலி கார்பனேட்' மற்றும் பிற பிளாஸ்டிக் சேர்மங்கள் உருகத் தொடங்கி, 'பிபிஏ' (BPA) போன்ற ஆபத்தான ரசாயனங்கள் நீரில் கலக்கும் வேதியியல் மாற்றம் நிகழ்கிறது.

ஆபத்தான ரசாயனம் கலந்த இந்த நீரைக் குடிப்பதால் உடலில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் வெயிலில் நீண்ட நாட்கள் சூடாகும் பிளாஸ்டிக் நீரில் அர்செனிக், காரீயம் போன்ற நச்சு உலோகங்கள் கலந்து புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் வெதுவெதுப்பான நீர் பாக்டீரியா மற்றும் பாசிகள் வளர ஏதுவான சூழலை உருவாக்கி உடல் நலக் கேடுகள் தரும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் "பிளாஸ்டிக் ரசாயனங்கள் உடலில் அகச்சுரப்பி அமைப்பை பாதித்து, ஹார்மோன் மாற்றத்தை உருவாக்கும். மேலும், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தவும் வழிவகுக்கும். வெயிலின் காரணமாக குடிநீரில் உள்ள டி.டி.எஸ்.என்ற தனிமம் அளவு குறைந்தால், எலும்பு தேய்மான பிரச்னையை ஏற்படுத்தும். ஒரு குடிநீர் கேனை, 30 முதல் 50 முறை மட்டுமே பயன்படுத்தலாம். கேன்களின் நிறம் மாறினால், பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குடிநீர் கேனை வெயிலில் வைக்காமல், குளிர்ந்த அல்லது நிழலான பகுதிகளில் மட்டுமே வைக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத குடிநீர் கேன் விற்பனை செய்வோர் குறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை செயலி மற்றும் https://www.foodsafety.tn.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். அவர்களுக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளனர்.

எனவே,இனி நாமும் குடிநீர் கேன்களை வாங்கும்போது அவற்றில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முத்திரை, தயாரிப்புத் தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவை துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து வாங்குவது அவசியமாகும். அதேபோல், இந்த ஆரோக்கிய விதிகளை மீறும் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தேவைப்பட்டால் புகார் அளிப்பதும் குடிமக்களாகிய நமது கடமையாகும்.

இதையும் படியுங்கள்:
வென்றது மனிதநேயம்: ஏழைத் தொழிலாளியின் உயிருக்காக ரூ.34 கோடியை அள்ளிக்கொடுத்த கேரள மக்கள்!
can water
logo
Kalki Online
kalkionline.com