சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண்.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண்.

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தன் காதலிக்காக சூர்யா அமெரிக்கா பறந்து போவது போல, தன் காதலனுக்காக பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் வழியாக சட்டவிரோதமாக ஒரு பெண் இந்தியாவுக்குள் நுழைந்து, காதலனைக் கரம்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானைச் சேர்ந்த 30 வயதான சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் குலாம் ஹைதர் என்பவருக்கும் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளது. குடும்ப வறுமை காரணமாக குலாம் ஹைதர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு சீமா ஹைதரும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்கிற இளைஞரும், பப்ஜி விளையாட்டு விளையாடும்போது அறிமேகமாகியுள்ளனர். 

இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பப்ஜி விளையாட்டு விளையாடி வந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகுதான் பாகிஸ்தானை விட்டு வெளியேறி எப்படியாவது இந்தியாவுக்கு வந்து தன் காதலனுடன் வாழ்வதற்கு சீமா முடிவெடுத்துள்ளார். அதனால் கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா, நொய்டாவில் வசிக்கும் தன் காதலனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். இதில் அதிர்ச்சியளிக்கக்கூடியது என்னவென்றால், சீமா தனியாக வரவில்லை தன் 4 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்து வந்துள்ளார். 

இந்தப் பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது போலீசார் கவனத்திற்கு வந்ததால், சீமா, சச்சின், சச்சினின் தந்தை என அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு பெயில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஊடகங்களில் வெளியானதால் சீமாவின் கணவரான 'குலாம் ஹைதர்', சவுதி அரேபியாவிலிருந்து இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக காணொளி ஒன்றை அனுப்பியிருந்தார். அவர் அந்தக் காணொளியில், தான் தற்போது சவுதி அரேபியாவில் இருப்பதாகவும். தன்னுடைய மனைவி மற்றும் 4 குழந்தைகளையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பிவிடும்படியும் தாழ்மையாக கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை சீமா ஒரு பேட்டியில் திட்டவட்டமாக தெரிவித்தார். 

"சிறுவயதிலேயே என்னை குலாம் ஹைதருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். எனக்கு இந்த திருமண வாழ்க்கையில் துளி கூட விருப்பமில்லை. இப்போது என்னுடைய சொந்த விருப்பத்தில் தான் இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். இங்கு வந்து இந்துவாக மாறி சச்சினை திருமணம் செய்து கொண்டேன். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தான் இந்துவாக மாறினேன். எனக்கு பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை. இங்கிருந்தே விவாகரத்துக்கான நடைமுறைகளை செய்துகொள்கிறேன். 

ஒருவேளை நீங்கள் என்னை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பினால், நிச்சயம் என் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவார்கள். எனவே ஒருபோதும் என்னால் அங்கு செல்ல முடியாது. சச்சின் என்னிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கிறார். குழந்தைகளிடமும் பாசமாக இருக்கிறார். பணம் இருந்தாலும் மதிப்பு தராத நபருடன் என்னால் வாழ முடியாது. இந்தியாவுக்கு வருவதற்காக பாகிஸ்தானில் இருந்த என்னுடைய நிலத்தை 12 லட்சத்திற்கு விற்று தான் இங்கு வந்திருக்கிறேன்"  என செய்தியாளர்கள் முன்பு சீமா கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com